கரூர், பிப். 11: கரூர் அமராவதி ஆண்டாங்கோயில் தடுப்பணையில் போதிய மீன் வரத்து இல்லாததால் வலை விரித்த மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர். கரூர் மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் காவிரி, அமராவதி ஆகும். மேலும் அமராவதி ஆற்றை காட்டிலும் காவிரி ஆற்றில் எப்போதும் நீர்வரத்து அதிகம் இருப்பதால் போதுமான அளவு மீன்கள் உள்ளது. மேலும் காவிரி ஆற்றை படுகை பகுதியில் ஏராளமான மீனவர்கள் காவிரி ஆற்றில் உள்ள மீன்களைப் பிடித்து தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்கின்றனர். அதே சமயம் அமராவதி தடுப்பணை பகுதியில் எப்போதும் நீர் இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் மட்டும் அதிக அளவு நீர் இருப்பதாலும் அதன்பின் முழுமையான அளவு நீர் இல்லாத நிலை இருந்தாலும் ஓரளவு மீன்கள் வசிப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் இருக்கிறது.
அதே சமயம் அமராவதி ஆண்டாங்கோவில் தடுப்பணை குறுகிய பகுதி என்பதால் அதில் உள்ள மீன்வளங்களை மீனவர்கள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் தேவைக்காகவும் சிறிய அளவில் மீன் விற்பனைக்காகவும் பிடித்துக் கொள்கின்றனர். இதனால் அமராவதி ஆற்றில் போதுமான மீன் இருப்பதில்லை. தற்போது மழைக்காலம் முடிந்து விட்டது என்பதால் தடுப்பணைகளில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சென்று வருகிறது. தற்போது மீன் குஞ்சு விடுவதற்கு ஏதுவான நிலவுவதால் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர், தனி கவனம் செலுத்தி அமராவதி ஆற்றில் பிரத்யேகமாக கட்லா, லோகு ,விரால், புல் கெண்டை, கெளுத்தி, இறால் நாட்டு ரக மீன் குஞ்சுகளை விட்டு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அவ்வாறு மீன் குஞ்சுகளை விடுவதால் மீன் வளர்ந்து பொதுமக்களுக்கு தரமான உணவு கிடைப்பதுடன் நீர்நிலைகளில் வாழும் மீன்களைப் பிடித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். மேலும் ஆண்டாங்கோவில் தடுப்பணை சுற்றி பள்ளபாளையம், விசுவநாதபுரி, ஆண்டாங்கோவில் மேல்பாகம், கீழ்பாகம், திருமாநிலையூர் மற்றும் தாந்தோணி மலை சுற்றியுள்ள ஏராளமானோர் தாங்கள் மீன் பிடிப்பதற்கு வசதியான பகுதியாகும். எனவே அமராவதி ஆற்றில் உள்ள தடுப்பணைகளில் மீன் குஞ்சுகளை விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும் கடந்த சில நாட்களாக முன்பாக மீனவர்கள் ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு சென்று மீன் பிடிப்பதற்காக வலையை வீசியபோது போதிய அளவு மீன் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆண்டாங்கோயில் தடுப்பணை பகுதிகள் மற்றும் அமராவதி ஆற்றுப்படுகைகளில் மீன்வளத்தை பெருக்க மாநில மீன்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.