வடலூர், ஆக. 4: என்எல்சி சுரங்கத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2வது சுரங்கம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தின் மேல் தளத்தில் மண், நிலக்கரியை வெட்டி எடுத்து கன்வேயர் பெல்ட் மூலம் மேலே கொண்டு வருவதற்காக, பயன்படுத்தப்படும் ரூ. 300 கோடி மதிப்பிலான, ராட்சத இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சுரங்க முழுவதும் கரும்புகையுடன், வானுயுர தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தொழிலாளர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. ராட்சத இயந்திரத்தின் பெல்ட் எரிந்துவிட்டது. மீண்டும் அதனை சீரமைத்து இயக்கபட்டது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்களுக்கு உயிர் சேதம், பொருட்சேதமும் ஏதும் ஏற்படவில்லை. விளை நிலங்களில் உள்ள பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணி, ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று சுரங்கம் 2ல் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.