கும்பகோணம், மார்ச்17:தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம்-ஹைதராபாத் நிதியுதவியுடன் விவசாயிகளுக்கான நெல் சாகுபடிக்கான முக்கிய இடுபொருட்கள் வழங்குதல் மற்றும் செயல் விளக்கம் அளித்தல் வயல் விழா நடைபெற்றது. விழாவில் பேராசிரியர் (பயிர் நோயியல்) ராஜப்பன் அனைவரையும் வரவேற்றார். ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் சுப்ரமணியன் தலைமையேற்று பேசுகையில், மண்வளம் காத்தல் மற்றும் தொழில் முனைவோருக்கான பண்ணை கருவிகள் பயன்பாடு பற்றி வலியுறுத்தினார். பேராசிரியர்கள் (வேளாண் விரிவாக்கம்) அருணாச்சலம், (பயிர் மரபியல்) அர.மணிமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து பேராசிரியர் (பயிர் நோயியல்) ராஜப்பன், இணை பேராசிரியை (உழவியல்) இளமதி, இணை பேராசிரியர் (பயிர் மரபியல்) தண்டபாணி, உதவி பேராசிரியை (பயிர் மரபியல்) புஷ்பா மற்றும் இணை பேராசிரியை (பூச்சியியல்) ஆனந்தி ஆகியோர் தொழிற்நுட்ப உரையாற்றினர். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் விஞ்ஞானிகளோடு விவசாயிகள் கலந்துரையாடி தொழிற்நுட்பங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் இடுபொருட்கள் மற்றும் தொழில்நுட்ப புத்தகம் வழங்கப்பட்டது. முடிவில் இளமதி நன்றி கூறினார்.