Sunday, June 16, 2024
Home » அட்சய திரிதியை நகை வாங்க மக்கள் ஆர்வம்: கோவையில் 100 கிலோ தங்கம் விற்பனை

அட்சய திரிதியை நகை வாங்க மக்கள் ஆர்வம்: கோவையில் 100 கிலோ தங்கம் விற்பனை

by Neethimaan

கோவை, மே.11: கோவை மாவட்டத்தில் அட்சய திரிதியையொட்டி தங்க நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்தது. இந்த நாளில் நகை வாங்கினால் மேலும் தங்க நகைகள் குவியும், செல்வ செழிப்பு இருக்கும். தங்கம் வாழ்வில் நிலைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் இருக்கிறது. பெண்கள், அட்சய திரிதியை நாளில் நகை வாங்கி சேமிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் வரும் நாட்களில் முகூர்த்த நாட்கள் இருப்பதாலும் பொதுமக்கள் விசேஷத்தை முன்னிட்டும் நகைகள் வாங்க ஆர்வமாக இருக்கின்றனர். அட்சய திரிதியை நாளான நேற்று மாவட்ட அளவில் நகை கடைகளில் கூட்டம் குவிந்தது. அதிகாலை முதல் கடைகள் திறக்கப்பட்ட வியாபாரம் ஜோராக நடந்தது. நகைகளின் விலை காலையில் இருந்து 3 முறை மாறியது. காலையில் முதல் ரேட் 22 காரட் தங்க நகை கிராமிற்கு 6,660 ரூபாயாக இருந்தது. பின்னர் சிறிது நேரத்தில் 6,705 ரூபாய் என உயர்ந்து, மாலை நேரம் 6,770 ரூபாய் என அதிரடியாக அதிகரித்தது. வேறு எந்த நாட்களிலும் இதுபோல் ஒரே நாளில் 3 முறை விலை உயர்ந்ததில்லை. சுமார் 90 முதல் 100 கோடி ரூபாய்க்கு தங்க நகை வியாபாரம் நடந்திருப்பதாக தெரிகிறது.

கோவை மாவட்ட தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் மகாலட்சுமி ஜூவல்லரி முத்து வெங்கட்ராமன் கூறுகையில், ‘‘தங்க நகை வியாபாரம் அட்சய திரிதியை நாளில் அதிகமாக விற்பனையாவது வழக்கம். கடந்த ஆண்டு ஒரு கிராம் தங்க நகை ஒரு கிராம் வரி ஏதுவுமின்றி 5,715 ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு 6,770 ரூபாய் என இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிராம் 1,055 ரூபாய், பவுன் 8,440 ரூபாய் என உயர்ந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு அட்சய திரிதியை நாளில் தங்கம் கிராம் 4,925 ரூபாய் என இருந்தது. கடந்த 2 ஆண்டில் தங்கம் விலை கிராமிற்கு 37.5 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தங்கம் விலை இந்த அளவிற்கு ஏற்றம் சந்திக்கவில்லை. இதனால் மக்களிடையே வாங்கும் திறன் வெகுவாக குறைந்து விட்டது. பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை காலமாக இருப்பதால் இந்த முறை பெரிய அளவில் கூட்டம் இல்லை. கடந்த ஆண்டு அட்சய திரிதியை நாளுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் கூட்டம் 50 சதவீதம் குறைவுதான். இருந்த போதிலும் நடப்பாண்டு அட்சய திரிதியை விற்பனையாக ஒரே நாளில் சுமார் 100 கிலோ எடையிலான தங்க நகைகள் விற்பனையாகியுள்ளது. மாவட்ட அளவில் ஆயிரம் தங்க நகை கடைகளின் மூலமாக சுமார் 12 ஆயிரம் பவுன் தங்க நகைகள் விற்பனையானது. கடந்த ஆண்டு அட்சய திரிதியை நாளில் 200 கிலோ எடையிலான தங்க நகைகள் விற்பனையானது’’ என்றார்.

You may also like

Leave a Comment

20 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi