அறந்தாங்கி,ஆக.22: ஆவுடையார்கோயில் தாலுகா துஞ்சனூர் கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் அங்கயர்கன்னி அம்மையார் உடனுறை அகத்தீஸ்வரர் பெருமாள் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 19ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 2நாட்களாக யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஹரிஹரன் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.