விருதுநகர், பிப்.17: கனமழையால் பாதித்த பயிர்களை கணக்கெடுக்காத கிராமங்களில் கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், வேளாண் விற்பனைக்குழு மூலம் பொருளீட்டுக்கடன் 3 விவசாயிகளுக்கு ரூ.3.10 லட்சம் வழங்கினார். கடந்த டிச.17 முதல் 19 வரை பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்காத கிராமத்திற்கு சென்று கணக்கெடுத்து விரைவில் சமர்ப்பிக்க அனைத்து வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இணைந்து 5 பேர் அடங்கிய குழு அமைத்து கண்மாய்களை நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பிரச்சனைகளை கண்டறிந்து திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இ.சந்தை மூலம் அறுவடை செய்யப்பட்டு வரும் பருத்தி, மக்காச்சோளத்தை விவசாயிகளுக்கு நல்ல விலைக்கு விற்பனை செய்யவும், பயிர்வாரியாக விற்பனை விலை விபரங்கள் தினசரி விவசாயிகள் அறியும் வகையில் பத்திரிகை செய்தி பிரசுரம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ய கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அனைத்து வட்டாரங்களில் உள்ள தென்னை மரத்திற்கு பயிர் காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார். கூட்டத்தில், டிஆர்ஓ ராஜேந்திரன், துணை இயக்குநர் மேகமலை புலிகள் காப்பகம் தேவராஜ், நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.