நாகப்பட்டினம், மார்ச்7: பதட்டமான இடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று காவலர்களுக்கு எஸ்பி அறிவுறுத்தினார். நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமை வகித்தார். வரும் 2024 ம் ஆண்டு பாராளுமன்ற பொது தேர்தலின் போது பாதுகாப்பிற்காக வரும் பாதுகாப்பு படையினர் தங்குவதற்கு தேவையான இட வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் காவல்துறையினர் போன்றவர் ஈடுபடுவார்கள்.
அந்த நேரத்தில் அவர்களுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். அதேபோல் காவல் நிலையங்களில் தேர்தல் தொடர்பாக பதிவேடுகள் பராமரிப்பு செய்ய வேண்டும். இதற்கு முன்பு நடந்த தேர்தல் காலங்களில் பராமரிப்பு செய்த பதிவுகளின் குறிப்புகளை தற்போது பார்த்து நடைமுறைப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் பதட்டமான இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். வாக்கு சாவடிகளில் பிரச்னைக்குரிய காரணங்களை முன்பே சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளும், உளவு பிரிவு காவல் துறையினரும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.
அது தொடர்பாக அறிக்கை தயார் செய்து உடனே சமர்ப்பிக்க வேண்டும். காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உடனே விரைந்து முடிக்க வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தல் பணிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றார். மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்தில் இருந்து காவல் நிலைய அதிகாரிகளும், அனைத்து காவல் நிலைய எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.