கோவை, பிப். 10: கோவையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை பேரூர் ரோடு நாகராஜபுரத்தை சேர்ந்தவர் மைதிலி (34). இவர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து வசித்து வருகிறார். இந்நிலையில், மைதிலிக்கு கோவை தெற்கு உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த சையத் இப்ராஹிம் (40) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.
இருவரும் ஓட்டல் தொடங்க திட்டமிட்டதாகவும், அதற்காக மைதிலி ரூ.6 லட்சத்தை சையத் இப்ராஹிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் ஓட்டல் தொடங்கவில்லை. இதனால், மைதிலி தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். பணம் கொடுக்காமல் சையத் இப்ராஹிம் காலம் கடத்தியதால் அவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் சையத் இப்ராஹிம் மைதிலியை தொடர்புகொண்டு பணம் கொடுப்பதாக கூறி ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வரவழைத்தார்.
அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சையத் இப்ராஹிம் தகாத வார்த்தையால் பேசி மைதிலியை ஹெல்மெட்டால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மைதிலி அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சையத் இப்ராஹிம் மீது தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.