போச்சம்பள்ளி, ஜூன் 10: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கருப்பேரி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு, நேற்று காலை ஊர்கவுண்டர்கள் மாணிக்கவாசம், ராஜப்பன் ஆகியோர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி மற்றும் கோயில் உண்டியலை உடைத்து, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.