நாமக்கல், செப். 27: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பியின் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் 33 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹17.97 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். சின்ராஜ் எம்பி, ராமலிங்கம் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ₹94,167வீதம் ₹16.95 லட்சம் மதிப்பில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் தலா ₹6,800 வீதம் ₹1.02 லட்சம் மதிப்பில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலி என மொத்தம் 33 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹17.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார்.
தொடர்ந்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டு விழாவை முன்னிட்ட, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று பயனடைந்த 5 நபர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும், 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, 5 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட அட்டைகளையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மூலம் சிறப்பாக சிகிச்சை மேற்கொண்ட 2 அரசு மருத்துவமனைகள், 2 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 4 மருத்துவமனைகளை பாராட்டி, நற்சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார், நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, நகர்மன்ற உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, தெற்கு நகர திமுக செயலாளர் ராணா.ஆனந்த், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் (பொ) மகிழ்நன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.