சேலம், ஜன.18: சேலம் வீராணம் சின்னனூர் பகுதியை சேர்ந்தவர் கோபி(29) எலக்ட்ரீசியன். இவரது தம்பி நவீன்குமார். கோபிக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் மது அருந்தி விட்டு தம்பி மற்றும் தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை அந்த பகுதியில் நவீன்குமார் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். அப்போது அங்கு போதையில் வந்த கோபியும் அவர்களுடன் சேர்ந்து விளையாடினார். பின்னர் தம்பி நவீன்குமாருடன் கோபி தகராறில் ஈடுபட்டார்.
அப்போது ஆத்திரமடைந்த நவீன்குமார் அங்கிருந்த கட்டையால் அண்ணனை தாக்கினார். இதில் கீழே விழுந்த அவரை, நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்களான காளிதாஸ், முத்து, ரஞ்சித் ஆகியோரும் சேர்ந்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இதுபற்றி வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன்குமார், அவரது நண்பர்கள் காளிதாஸ்(28), முத்து(32), ரஞ்சித்குமார்(31) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள விஜயகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.