புதுக்கோட்டை,பிப்.27: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது;
பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 349 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கிக் கடன் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,10,000 மதிப்பிலான வங்கிக் கடனுதவித் தொகைக்கான காசோலைகள் மற்றும் விலையில்லா மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் திட்டத்தின்கீழ் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.30,000 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்கள் என மொத்தம் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,40,000 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் சரவணன் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு), ரம்யாதேவி (காவிரி-வைகை-குண்டாறு), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்அமீர் பாஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.