கும்பகோணம், ஜூன் 11: கும்பகோணத்தில் கலைஞரின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாமை மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம்தொடங்கி வைத்தார். கும்பகோணம் ஐயப்பன் நகரில் உள்ள அரசினர் தொடக்கப் பள்ளியில் முத்தமிழறிஞர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் பிரபு சீனிவாசன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.பி ராமலிங்கம் கலந்து கொண்டார். இம்முகாமில் கண்பார்வை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருத்துவர்கள் கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் செவிலியர்கள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.