தென்காசி,ஜன.30: கீழ ஆம்பூர் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆதி தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் பொதிகை ஆதவன் தலைமையில் தென்காசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மனு விவரம்: கீழ ஆம்பூர் பகுதியில் இந்து அருந்ததியர் வகுப்பைச் சார்ந்தவர்கள் 30க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் . 1987 கட்டப்பட்ட 5 வீடுகளுக்கு தனி பட்டா உள்ளது. மீதி உள்ள வீடுகளுக்கு பட்டா இல்லை. அந்த வீடுகள் மிகவும் சேதம் அடைந்து வீட்டில் குடியிருக்க முடியாமல் உள்ளது. சாலை வசதியும் இல்லை. மேலும் ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் வசித்து வருகின்றோம். எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழையின் காரணமாக குடியிருக்க முடியாமல் அருகில் உள்ள மண்டபத்தில் ஆறு நாட்கள் தங்கி இருந்தோம். எனவே எங்களுக்கு பழைய வீடுகளை அகற்றிவிட்டு புது வீடு கட்டித் தரவும், பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.