நெய்வேலி, ஜூன் 9: நெய்வேலி வட்டம்-1 சிலோன் குடியிருப்பு மெயின் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் மகன் சஞ்சய்(19). இவர் நெய்வேலி வட்டம் 12ல் உள்ள அரசு ஐடிஐயில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஐடிஐக்கு சென்றுவிட்டு வந்தபோது மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று நெய்வேலி சுடுகாடு பகுதியில் அடித்து உதைத்து பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து சஞ்சய், நெய்வேலி நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுதாகர் தலைமையில் டெல்டா காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாபு, தாஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மர்ம நபர்கள் வட்டம்-5 சுடுகாடு பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று அவர்களை பிடிக்க முயன்றனர்.
போலீசாரை பார்த்ததும் நெய்வேலி அடுத்த சொரத்தங்குழி ஜெயராமன் மகன் மாம்பழம் என்கிற அசோக் ராமன்(24) மற்றும் வடக்கு மேலூர் வீரப்பன் மகன் எலி (எ) சந்துரு(25) ஆகியோர் தப்பியோட முயற்சி செய்தபோது கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு சம்பவம்: நெய்வேலி வட்டம் 21 பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் கிருபாகரன்(25). இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இருவர், கிருபாகரன் விளையாடி கொண்டிருந்த பந்தை எடுத்துக்கொண்டனர். இது குறித்து கிருபாகரன் கேட்கும் போது, அவரது தந்தை பாண்டியனை கட்டையால் தாக்கினர்.
இது குறித்து பாண்டியன் மனைவி பானு, நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து என்எல்சி குடியிருப்பில் பதுங்கி இருந்த வட்டம் 21 பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் பிரசாத்(21), வட்டம் 11 பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் குணசீலன்(24) ஆகியோரை பிடித்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து 2 பேரும் தப்பி செல்ல முயன்றபோது, கீழே விழுந்து கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து 2 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.