கோவை, ஏப்.4: கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்தவர் ராவுத்தர் கனி (24). இவர் கோவை வ.உ.சி பூங்கா அருகே உள்ள தள்ளுவண்டி பானி பூரி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வரும் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த ஜெயனால் ஆசாத் (32), சர்புதீன் (29) ஆகியோருக்கும் இடையே தொழில் போட்டியில் முன் விரோதம் இருந்ததாகவும், அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பைக்கில் வந்த ஜெயனால் ஆசாத் மற்றும் சர்புதீன் ஆகியோர் பைக்கில் தள்ளுவண்டி கடை மீது மோதி தகராறில் ஈடுபட்டனர். அப்போது ராவுத்தர் கனி அவர்களை எச்சரித்தார்.
ஆத்திரமடைந்த இரண்டு பேரும் ராவுத்தர் கனியை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு முதுகு, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. தடுக்க முயன்ற ராவுத்தர் கனியின் சகோதரர் திப்பு சுல்தான் (30) மற்றும் பக்கத்து கடைக்காரர் மோஸ்கான் என்பவரையும் தாக்கினர். இவர்கள் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு சென்றனர். இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் ஜெயனால் ஆசாத் மற்றும் சர்புதீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.