விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அந்தகட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரன் பேசியதாவது: தேர்தல் பத்திரம் மூலம் நாட்டின் சுமார் 60 சதவீத நிதியை பிரதிபலனுக்காக பாஜ நன்கொடையாக பெற்ற விவகாரம் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஏற்கப்படாத இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை தற்போது அமல்படுத்தி ஒன்றிய பாஜ அரசு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறும் நபர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடி இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்காமல் வஞ்சித்து வருகிறார்.
சர்வாதிகாரியான ஹிட்லர் போல பிரதமர் மோடி செயல்பட்டு நாட்டு மக்களை அடிமையாக்கி வருகிறார். தற்போது 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மோடி அவர் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. எதிர்காலத்தில் சர்வாதிகார பாசிச ஆட்சி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கான போராட்டம் இது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத, பாசிச கொள்கையில் நம்பிக்கை உடைய ஹிட்லரை, பிரதமரை மோடி பின்பற்றுகிறார். மதசார்பற்ற நாடு, பல மொழிகள் பேசும் நாடு, வேறுபாடு கொண்ட நாடு இந்தியா. ஆனால் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கட்சி என்ற நோக்கில் செயல்பட்டு வரும் உலக மகா நடிகர் மோடி. உலகத்தில் மோடியை போன்ற நடிகர் இல்லை. மோடிக்கும், அவருக்கு துணைபோன அதிமுகவிற்கும் எதிரான எதிர்ப்பு அலை தமிழகத்தில் வீசுகிறது. இவ்வாறு பேசினார்.