திருப்பத்தூர்: திருப்பத்தூரில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சத்திற்கு மேல் கொண்டு செல்லும் நபர்களின் வீடுகளில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷின் அக்காள் மருமகன் நவீன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நவீன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய வருமான வரி சோதனையில் ரூ.40 லட்சம் ரொக்கம் சிக்கியது.
வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இதை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதன் பின்னரே எதற்காக இந்த ரெய்டு நடத்தப்பட்டது என்பது தெரிய வரும்.