தேனி : தேனி அருகே உள்ள குன்னூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தேனி நகராட்சியை அடுத்துள்ள ஊராட்சியாக தேனி நகர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் ஊராட்சி அமைந்துள்ளது. குன்னூர் ஊராட்சியில் குன்னூர் மற்றும் அரப்படித்தேவன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. 9 வார்டுகள் உள்ளது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர். சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, வாழை மற்றும் தோட்டக்காய் கறிகளான கத்தரிக்காய், தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ் உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த 1993ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது குன்னூர் வைகை ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளமானது இக்கிராமத்திற்குள் புகுந்தது. அப்போது கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து அப்போது, இக்கிராமத்தை சுற்றியும் வைகை ஆற்றின் நீர் கிராமத்திற்குள் புகாதபடி சுமார் 2 அடி அகலம் 6 அடி உயரத்திற்கு சுற்றுதடுப்புச்சுவர் எழுப்பப்பட்டது. இக்கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தபால் நிலையம், நகர்நல வாழ்வு மையம், ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள இக்கிராமத்தில் சுகாதாரம் தற்போது கேள்விக்குறியாக மாறி வருகிறது.
2013ம் ஆண்டு கிராமத்தின் கிழக்குப்பகுதியில் நாடக மேடை அமைக்கப்பட்டது.இதனருகே அனைத்து கிராம அண்ணாமறுமலர்ச்சி திட்ட நூலகம் கட்டப்பட்டது. இதனருகே அங்கன்வாடி மையமும் கட்டப்பட்டது. இம்மூன்று கட்டிடங்களுக்கு முன்பாக கிராம விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. ஆனால், இதில் அங்கன்வாடி மையம் தற்போது செயல்படாமல் உள்ளது. இதேபோல நாடகமேடை எதிரே உள்ள மைதானத்தில் கிராம கழிவுநீர் தேங்கியும், வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதி ஊற்றுநீர் நிரம்பியும் உள்ளதால் நாடகமேடை செயல்பாடில்லாமல் உள்ளது.
இதன்காரணமாக பொங்கல் திருநாளில் விளையாட்டு போட்டிகள் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதேபோல கடந்த 1974ம் ஆண்டு அப்போதைய மின்துறை அமைச்சரான ஓ.பி.ராமனால் திறந்து வைக்கப்பட்ட குன்னூர் ஹரிஜன நல பள்ளிக்கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறை மூலம் ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. மிகவும் பழுதடைந்த நிலையில் மழை பெய்தால் மழைநீர் முழுமையாக நூலகத்திற்குள் புகுந்து, நூலகத்திற்குள் உள்ள நூல்கள் சேதமடையும் அவலம் உள்ளது.
அதேசமயம் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகம் புதியதாக 2023ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. ஊர்ப்புற நூலகத்தில் உள்ளதை போன்ற நூல்கள் வசதி இந்நூலகத்தில் இல்லாத நிலையில், பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஊர்ப்புற நூலகத்தை அண்ணா மறுமலர்ச்சி நூலகத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேபோல ஊர்ப்புற நூலகத்தை ஒட்டி இருந்த அங்கன்வாடி மையக்கட்டிடம் பழுதடைந்ததால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், பழைய அங்கன்வாடி கட்டிடம் அகற்றப்படாமல் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இக்கட்டிடத்தையும், ஊர்ப்புற நூலக கட்டிடத்தையும் அகற்றினால், இந்த இடத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயில்வதற்கான கட்டிடத்தையோ விளையாட்டு அரங்கமாகவோ மாற்றித் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குன்னூர் கிராமத்தில் பெரும்பாலான தெருக்கள் சிமெண்டு கான்கிரீட்டால் போடப்பட்டிருந்தாலும், இன்னமும், கலைஞர் நகரின் முதல் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் சிமெண்டு கான்கிரீட் சாலை வசதியில்லாமல் மண் சாலையாகவே இருந்து வருகிறது. மேலும், கிராமத்தில் உள்ள கழிவுநீரோடைகளின் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் சாலைகளில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
தேனியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ள குன்னூர் கிராமத்தின் சாலையின் இருபுறமும் பயணிகள் நிழற்குடை இருந்தது. சாலை அகலப்படுத்தப்படும்போது, இவ்விரு பயணியர்நிழற்குடைகளும் அகற்றப்பட்டன. இதனால் இக்கிராமத்தில் இருந்து வெளியூர் செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும்போது மழை பெய்தாலோ, அதிக அளவில் வெயில் அடித்தாலோ ஒதுங்க நிழற்குடை இல்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, குன்னூர் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குன்னூர் கிராமத்தில் பள்ளி, தபால்நிலையம், இசேவை மையம், நகர்வாழ்வு மையம், பள்ளிகள் என பல்வேறு அலுவலகங்கள் உள்ளநிலையில் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏடிஎம் சேவை மையம் இக்கிராமத்தில் இல்லாததால் பொதுமக்கள் அவசரத் தேவைக்கு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க தேனி கலெக்டர் அலுவலகத்திற்கோ அல்லது தேனி நகருக்கோ வந்து செல்ல வேண்டியுள்ளது.எனவே, குன்னூர் கிராமத்திற்கு மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து, இக்கிராமத்திற்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.