திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் புயல் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தெரிவித்தார். திருவள்ளூர் நகரமன்ற கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், ஆணையாளர் போ.வி.சுரேந்திரஷா முன்னிலை வகித்தனர். நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், வி.சுமித்ரா வெங்கடேசன், பி.நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர், கே.பிரபாகரன், ஆர்.பிரபு, ஜி.சாந்தி கோபி, அயூப் அலி, டி.கே.பாபு, வி.இ.ஜான், ஜி.ஆர்.ராஜ்குமார் (எ)தாமஸ், பத்மாவதி ஸ்ரீதர், அருணாஜெய்கிருஷ்ணா, இந்திரா பரசுராமன், வி.சீனிவாசன், எ.எஸ்.ஹேமலதா, ஆர்.விஜயகுமார், வி.எம்.கமலி, ஆனந்தி சந்திரசேகர், எல்.செந்தில்குமார், க.விஜயலட்சுமி கண்ணன், எஸ்.தனலட்சுமி சீனிவாசன், நகராட்சி பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், நகர் நல அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சரவணன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மிக்ஜாம் புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ.6 ஆயிரம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் வெள்ள நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். அத்துடன் கடைகள் ஏலம், வரவு, செலவு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான 36 தீர்மானங்கள் நிறைவேற்றினர். இதையடுத்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் பேசும்போது, ‘’மிக்ஜாம் புயலால் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீண்டும் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேதம் அடைந்த சாலைகள், பாதாள சாக்கடை கழிவு நீர் வெறியேறாமல் இருக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளின் எல்லைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்படும்’ என்றார்.