Sunday, October 6, 2024
Home » ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முழு ஆதரவு: செல்வப்பெருந்தகை

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முழு ஆதரவு: செல்வப்பெருந்தகை

by Neethimaan

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ள போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி 03 அன்று கடலுக்குச் சென்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளை சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இதனால், ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 ஆம் தேதி பேரணியாக சென்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர் மீனவ பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையினால் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய மீன்வளத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களிடம் தமிழக மீனவப் பிரதிநிதிகள் நேரடியாக சென்று சிறை தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்திய பின்னரும் மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மேலும் ஒரு இராமேஸ்வரம் மீனவரான ஜான்சன் என்பவருக்கு இலங்கை நீதிமன்றம் மீண்டும் ஆறு மாத சிறை தண்டனையை நேற்று விதித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக் காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 2014 முதல் பிப்ரவரி 2024 வரையிலுமான 10 ஆண்டுகளில் சுமார் 400 படகுகள் உட்பட 3179 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர். பிரதமர் மோடி ஆட்சியின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியினால் தான் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறலும், தாக்குதலும் தொடர்கிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு பாம்பனில் பா.ஜ.க.வினர், சுஷ்மா சுவராஜ் தலைமையில் கடல் தாமரை மாநாடு நடத்தி, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகம், இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது இருக்காது” என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தார்கள். அந்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாமல் தமிழக மீனவர்களுக்கு எதிரான அரசாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இராமேஸ்வரம் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிற வகையில், பாரம்பரியமாக பங்கேற்கிற கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிப்பது எனவும், நாளை முதல் தொடர் உண்ணாவிரதமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. எனவே, நமது ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில், பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை அன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டமும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 28 புதன்கிழமை அன்று காலை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் மோடிக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இந்தப் போராட்டங்கள் வெற்றி பெற அனைத்து மீனவ பெருமக்களும் பெருந்திரளாக பங்கேற்று மீனவ மக்களின் உரிமைகளை காக்க முன்வர வேண்டுமென அன்போடு அழைக்கிறேன். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் நடத்தும் இப்போராட்டங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், அகில இந்திய மீனவர் காங்கிரஸ், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவ பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்ள உள்ளார்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

14 + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi