திண்டுக்கல்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பழநி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் 150க்கும் மேற்பட்ட முன்னணித் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட எட்டாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ. டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த இளைஞர்கள் பங்கேற்று தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமை அடையாள அட்டை, சுய விவரக்குறிப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் பங்கேற்கலாம். எனவே படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.