மதுரையில் சித்திரை திருவிழா என்பது ஜாதி, மதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படும் உலக பிரசித்தி பெற்ற விழாவாகும். இந்த திருவிழா ஏப்.12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்.19ல் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் சூட்டும் விழா, ஏப்.21ல் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்.22ல் மதுரை நகருக்கு வரும் கள்ளழகரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை விழா, மறுநாள்(ஏப்.23) வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவும் நடக்க இருக்கிறது. இதற்காக இப்போதிருந்தே மதுரை மக்கள் தயாராகி வருகின்றனர். கொடியேற்றம் துவங்கி, கள்ளழகர் அழகர்மலையை போய் சேரும் வரை மதுரையை விழாக்கோலம் பூண்டிருக்கும். இதற்காகவே தென்மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பேர், மதுரைக்கு வந்து செல்வது வழக்கம். மேலும், பள்ளி விடுமுறை என்பதால் பலரும் சித்திரை திருவிழாவை காண வந்து செல்வார்கள்.
இந்த சூழலில், 7 கட்டமாக நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ல் துவங்கி மார்ச் 27ல் முடிகிறது. வேட்பு மனு பரிசீலனை மற்றும் மனுக்களை திரும்பபெறுதல் உள்ளிட்டவை முடிந்து, ஏப்.19 அன்று வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினத்தில்தான் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா நடக்கிறது. இந்த விழாவிற்காக மதுரை மக்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து மீனாட்சியம்மன் கோயில் பகுதிக்கு வந்து மகிழ்வர். தொடர்ந்து மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் என அடுத்தடுத்து விழாக்கள் வந்து கொண்டே இருக்கும். தொடர்ந்து அன்னதானம், வீதியுலா என மக்கள் அன்றைய நாள் முழுவதும் படு பிஸியாக இருப்பார்கள்.
மதுரையில் சித்திரை திருவிழா துவங்கி முடியும் வரை மதுரை மாவட்டத்தில் உள்ள போலீசார் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மதுரையில் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதோடு தேர்தல் வாக்குப்பதிவும் வருவதால் சித்திரை திருவிழா மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு குளறுபடியும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படும் நிலையில் இவர்களால் தேர்தல் பணியையும் எப்படி சிரமமின்றி மேற்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தென்மாவட்டங்களை சேர்ந்த பலரும் திருவிழாவுக்காக மதுரையில் கூடுவர். எனவே, ஏப்.19 வாக்குப்பதிவு நாளன்று மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது. போதாதகுறைக்கு மதுரையில் வெயிலின் அளவும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி எடுக்கிறது. தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரம், நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த இலக்கை அடைந்திடும் வகையிலும் குறைந்தபட்சம் மதுரை மக்களவை தொகுதியிலாவது தேர்தல் தேதியை மாற்ற வேண்டுமென்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த தேர்தலிலேயே தேர்தல் ஆணையத்துக்கு குட்டு வைத்த ஐகோர்ட்
கடந்த 2019ம் ஆண்டும் நாடாளுமன்ற தேர்தல் தற்போது போலவே சித்திரை திருவிழா காலகட்டத்தில் தான் அறிவிக்கப்பட்டது. இதனால், மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலை மட்டும் வேறு தேதிக்கு மாற்றக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எத்தனை உயரதிகாரிகள் விடுமுறை எடுத்து சித்திரை திருவிழாவுக்கு வருவார்கள் தெரியுமா? மதுரை சித்திரைத் திருவிழாவில் மட்டும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவர். தேரோடும் வீதியில் மட்டும் 51 வாக்குச் சாவடிகள் உள்ளன. களநிலவரம் தெரியாமல் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதுதான் இறுதியா? என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.