சென்னை: குடியரசு தினத்தையொட்டி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம். அனைவருக்கும் நெஞ்சார்ந்த இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள். வேற்றுமையில் ஒற்றுமையும் பன்முகக் கலாச்சாரமும் இந்தியத் தேசத்தின் இரு கண்களாக இருக்கின்றன. அவற்றைப் பேணிப் பாதுகாப்பதே நமது தலையாயக் கடமையாகும்.
அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாத்திட இந்நன்நாளில் உறுதி ஏற்போம். விடுதலை பெற்ற இந்தியாவிற்கான ஓர் அரசு உருவாக்கப்பட்ட வேளையில் , நமது விடுதலைப் போராட்ட வீரர்களால் நிரம்பியிருந்த அரசமைப்பு சபை நமது அரசு நிர்வாகத்தின் அடித்தளமாக மதச்சார்பின்மை அமையும் என நிர்ணயித்தனர். அனைத்துப் பெண்களுக்கும், அனைத்துச் சாதியினருக்கும் சம வாக்குரிமை வழங்குவதை அங்கீகரிக்காமல் மதச்சார்புள்ள நாடாக இந்தியா உருவாக வேண்டுமென்று அப்போது ஆர்.எஸ்.எஸ் எழுப்பிய குரல் நிராகரிக்கப்பட்டது.
மதச்சார்பற்ற, தாராளமயமான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற வகையில் நமது அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இத்தகைய அரசமைப்புச் சட்டத்தை ஆர்எஸ்எஸ் வெளிப்படையாகவே எதிர்த்து அதன் வார இதழில் தலையங்கமே எழுதியது. 75வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள் ஓரணியில் திரள்வதன் மூலமாகவே இந்தியாவின் எதிர்காலத்தைச் சிறப்பானதாகக் கட்டமைக்க முடியும். ஒவ்வொரு தனி மனிதனின் உரிமைகளும் முழுமையாக மதிக்கப்படுகிற போது தான் குடியரசு அதன் உண்மையான அர்த்தத்தைப் பூர்த்தி செய்யும்.
இந்திய அரசியலமைப்பு உருவாகுவதற்கு உன்னதப் பங்களிப்புகளை வழங்கிய மேதைகள் அனைவரையும் இந்த நன்னாளில் நினைவு கூர்ந்து அவர்களின் நோக்கத்தை நடைமுறைப்படுத்த சூளுரைப்போம். விவசாயம் கல்வி சுகாதாரம் தொழில் வளர்ச்சி எனஅனைத்துத் துறைகளிலும் உண்மையான வளர்ச்சி பெறவும் சாதி மத மொழிவேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க இந்தியாவோடு கரம் கோப்போம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.