திருவனந்தபுரம்: மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட காசர்கோடு மத்திய பல்கலைக்கழக உதவி பேராசிரியர் இப்திகர் அகம்மது சஸ்பெண்டு செய்யப்பட்டார். கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஆங்கில பிரிவில் உதவி பேராசிரியராக இருப்பவர் இப்திகர் அகம்மது. வகுப்பில் பாடம் எடுக்கும் போது மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாக புகார் எழுந்தது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்வு எழுதும்போது ஒரு மாணவி திடீரென மயங்கி விழுந்தார். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மாணவியிடம் இப்திகர் அகம்மது சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதை கவனித்த சக மாணவிகள், பல்கலைக்கழக துணைவேந்தர் பைஜுவிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த பல்கலைக்கழக புகார் கமிட்டிக்கு துணைவேந்தர் உத்தரவிட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மாணவிகள் அளித்த புகார் உண்மை என்பது தெரியவந்தது. தொடர்ந்து 2 வாரங்கள் வகுப்பு எடுக்க இப்திகர் அகம்மதுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து துணைவேந்தர் பைஜு உத்தரவிட்டுள்ளார். மேலும் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.