Saturday, May 25, 2024
Home » பாரத ஸ்டேட் வங்கியின் முறைகேடுகளை கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

பாரத ஸ்டேட் வங்கியின் முறைகேடுகளை கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

by Neethimaan

சென்னை: பாரத ஸ்டேட் வங்கியின் முறைகேடுகளை கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், எம்எல்ஏமான செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு அதிரடி தீர்ப்பில் மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரத் திட்டத்தை சட்டத்திற்கு புறம்பான ஒரு திட்டம் என்று அறிவித்தது. அந்த தீர்ப்பின்படி அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக வசூலித்த நன்கொடைகளின் முழு விபரங்களையும் வெளியிட அறிவுறுத்தியது.

அதேபோல், தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் பொதுவெளியில் மார்ச் 6, 2024 க்குள் வெளியிட்டும், அந்த விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கிடுமாறும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த தீர்ப்பு தேர்தலில் புழங்கும் கருப்புப்பணத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு தீர்க்கமான உத்தரவாக பொதுமக்கள் கருதினார்கள். இந்த தீர்ப்பினால் நிலை குலைந்தது பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான்.

ஏன் என்றால், 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தேர்தல் பத்திர திட்டம் மூலமாக நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதுவரை பெற்ற மொத்த நன்கொடை தொகை ரூ.12,000 கோடி. இதில் குறிப்பாக பாஜக மட்டும் ரூ. 6,566.11 கோடி தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெற்றுள்ள செய்தி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது ஒட்டுமொத்த தேர்தல் பத்திர நன்கொடையில் பாஜக மட்டுமே பெற்றது 55 சதவீதமாகும். இதன்மூலமாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாஜக மட்டுமே பெரும் ஆதாயம் அடைந்திருக்கிறது என்கிற உண்மை பட்டப்பரிவர்த்தனமாக மக்கள் மன்றத்தில் தெரியவந்துள்ளது.

ஆனால் மோடி அரசோ, இந்த நன்கொடைகள் பற்றிய விபரங்களை வெளியிடக்கூடாது என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்துள்ளது. மோடியின் இந்த அழுத்தம் காரணமாக தற்போது பாரத ஸ்டேட் வங்கியும், தேர்தல் பங்கு பத்திர விபரங்களை அளிக்கும் காலக்கெடுவை ஜூன் 30, 2024 வரை நீட்டித்து தருமாறு நேற்று ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது மிகப்பெரிய அயோக்கியத்தனமான செயல். ஏன் என்றால், நாட்டிலுள்ள அனைத்து வங்கி சேவைகளும் முழுவதுமாக கணினி மயமாக்கப்பட்டுள்ள விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பின்பு எதற்காக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதி மன்றம் கேட்ட தரவுகளை கொடுப்பதற்கு 3 மாதம் கால அவகாசம் கூடுதலாக கேட்க வேண்டும்?. பாரத ஸ்டேட் வங்கி பாஜகவின் இத்தகைய முறையற்ற பணப்பரிவர்த்தனைகளை மூடிமறைப்பதோடு மட்டுமல்லாமல், பாஜக தேர்தலில்போது செலவிடுவதற்கு வசதியாக இத்தகைய கருப்புப்பண புழக்கத்தை மறைமுகமாக ஆதரிப்பதாக ஒரு பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாட்டின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற முக்கியமான துறைகளுக்கு மோடி அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதோடு, அந்த அமைப்புகளை தன் அரசியல் லாபத்திற்காக தவறாக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

உண்மைகளை மூடிமறைக்க மோடி தலைமையிலான இந்த பாஜக அரசு செய்த பொய் பித்தலாட்டங்கள் அனைத்தும் நேற்று எஸ்.பி.ஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த கால நீட்டிப்பு மனுவின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜக பாரத ஸ்டேட் வங்கியை தன் கைப்பாவையாக பயன்படுத்தி இதுவரை செய்த முறைகேடுகள் மற்றும் சதிகளை கண்டித்து வருகிற மார்ச் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் மாநிலம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் என் தலைமையில் இன்று (06.03.2024) மயிலாடுதுறையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையின் முன்பு மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு எஸ். ராஜேஷ்குமார், மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திரு எஸ். ராஜ்குமார் மற்றும் முன்னணி தலைவர்கள் மற்றும் அனைத்து நிலை காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் பங்கேற்பார்கள்.

வருகிற மார்ச் 7ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும், அந்தந்த மாவட்டங்களிலும் அதேபோல் வட்டார அளவிலும் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டுவரும் வங்கியின் முறைகேடுகளை கண்டித்து பெருந்திரள் போராட்டம் நடத்திட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கமிட்டியின் அனைத்து நிலை நிர்வாகிகள், வட்டார கமிட்டியின் அனைத்து நிலை நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் எனது தலைமையில் சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் உள்ளூர் தலைமை அலுவலகத்தின் முன்பு வருகிற மார்ச் 7ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ். ராஜேஷ்குமார், மற்றும் மாநில காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள், ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள் – முன்னாள் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், சென்னையை சேர்ந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அதன் அனைத்து நிலை நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், அதன் அனைத்து நிலை நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

13 + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi