செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். பைக் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்தார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அடுத்த பட்டாகிராமனி தெருவை சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் திருப்பதி (23). இவர், தனது விலையுயர்ந்த பைக்கில் பல்வேறு சாகசங்கள் செய்து, அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். இதேபோல், கடந்த மாதம் செங்கல்பட்டு ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு இடங்களில் தனது விலையுயர்ந்த பைக்கில் வீலிங் செய்தும், 2 கைகளை விட்டபடி ஓட்டியும் திருப்பதி சாகசத்தில் ஈடுபட்டும், அவற்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருவதாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன.
இப்புகார்களின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சாய்பிரணீத் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, பைக்கில் வீலிங் செய்து பல்வேறு சாகசங்களில் ஈடுபட்ட திருப்பதி என்ற வாலிபரை நேற்று மாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரது பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, அவரது வலைதளப் பக்கத்தை முடக்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். மேலும், இதுபோன்ற பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கெனவே இதுபோன்ற பைக் சாகசத்தில் ஈடுபட்ட செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த கோகுல் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி சாய்பிரணீத் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை-திருச்சி-சென்னை ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையில் தான் அதிகளவில் பைக் வீலிங் சாகசங்கள் நடைபெறுகிறது. இத்தகைய செயலில் ஈடுபடும் வாலிபர்கள், தங்களின் குடும்பத்தினரின் நிலை கருதி, இதுபோன்ற செயல்களை கைவிட வேண்டும். இல்லையேல், சம்பந்தப்பட்ட நபர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.