லக்னோ: பாஜவின் கைப்பாவையாக சிபிஐ செயல்படுகிறது என்று அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். இவர், கடந்த 2012-16 காலகட்டத்தில், உத்தர பிரதேச மாநில முதல்வராக இருந்தபோது, சுரங்க குத்தகை சட்ட விரோதமாக நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக 2019ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அகிலேஷ் யாதவ் சாட்சியாக சேர்க்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு பிப்ரவரி 29ம் தேதிக்குள் ஆஜராகும்படி அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகவில்லை.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில், “பாஜவின் கைப்பாவையாக சிபிஐ செயல்படுகிறது. சமாஜ்வாதியை குறிவைத்து பாஜ இயங்குகிறது. 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்த தேர்தல் வந்துவிட்டது. இப்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் எனக்கு நோட்டீஸ் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நிறைய முன்னெடுப்புகளை செய்ததாக சொல்லும் பாஜ, ஏன் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எங்களை பார்த்து பயப்படுகிறது” என்றார்.