பெங்களூரு: கர்நாடகாவில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.7.84 கோடி மதிப்பிலான மதுபானம், ரொக்கம் ஆகியவற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கே.வி. ராஜேந்திரன் கூறுகையில், ‘மைசூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 3,35,879.05 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.7.84 கோடியாகும். சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை கண்காணிக்க நியமிக்கப்பட்ட குழுவால் ரூ.1.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் 150 பறக்கும் படைகள் மற்றும் 126 கண்காணிப்பு குழுக்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன’ என்றார்.