புதுடெல்லி: ‘வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசை மக்கள் தேர்ந்தெடுத்ததால் தான் பாஜ அரசின் சாதனைகள் சாத்தியமாகின்றன’ என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், “பாஜ அரசின் 9 ஆண்டுகள் பற்றிய பல டிவிட்டர் பதிவுகளை பார்க்கிறேன். அதில் 2014 முதல் பாஜ அரசின் அனைத்து செயல்களையும் பாராட்டியுள்ளார்கள் என்பதை பார்க்க முடிகிறது.
மக்களுடைய இந்த அன்பு எப்போதும் பணிவை தருகிறது. மக்களுக்காக இன்னும் கடினமாக உழைக்க உத்வேகத்தையும், பலத்தையும் தருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் பல சாதனைகளை செய்துள்ளோம். முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நிலையான அரசை மக்கள் தேர்ந்தெடுத்தது தான் எங்கள் சாதனைகளுக்கு காரணம். வரும் காலங்களில் இன்னும் அதிகமாக செய்ய விரும்புகிறோம். இதன் மூலம் வலுவான, வளமான இந்தியாவை உருவாக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.