கோவை, ஏப்.22: கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதனை பிபிஜி கல்விக் குழும அறங்காவலர் அக்சய் தங்கவேல் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முத்துமணி ஆண்டறிக்கை வாசித்தார். இதில் பிபிஜி கல்வி குழும தலைவர் டாக்டர் எல்.பி தங்கவேலு தலைமை உரையில், ‘‘மாணவர்களாகிய நீங்கள் ஆசிரியர்களுக்கு நற்பெயரை பெற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர் அமைப்பு குழு இணைந்து ஒவ்வொரு வருடமும் கல்லூரிக்கு வந்து இங்கு இருக்கக்கூடிய மாணவர்களிடமும், பேராசிரியர்களிடமும் உங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்’’ என்றார். சிறப்பு விருந்தினராக அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘சமூகத்தில் நல்லவிதமாக நடந்து கொள்ளும் முறையை மாணவர்கள் செயல்படுத்த வேண்டும்.
தற்போது உள்ள சூழலில் எல்லாவிதமான நற்பண்புகளையும், திறமைகளையும் வளர்த்துக்கொண்டால் மட்டுமே இந்த சமூகத்தில் நல்ல மனிதனாக வலம் வர முடியும். உலகத்தில் உள்ள எல்லா கல்வி நிறுவனங்களும் இந்திய ஆசிரியர்களின் ஆடை கலாசாரம் மற்றும் ஆசிரியர்களின் ஆளுமை, மாணவர்களை வழிநடத்தும் முறையை முன்மாதிரியாக கருதுகின்றனர். இங்கு உள்ள மாணவர்களில் ஒருவர் பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 10-வது பட்டமளிப்பு விழாவில் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பு செய்வீர்கள் என நான் நம்புகிறேன்’’ என்றார். விழாவில் மொத்தம் 176 மாணவ, மாணவிகள் பட்டங்களை பெற்றனர். இதில், பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் ஜெய பாலகிருஷ்ணன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.