காரைக்குடி, மார்ச் 21: காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலைதூரக்கல்வி மற்றும் இணையவழி கல்வி மற்றும் மீன்வள அறிவியல் துறை சார்பில் நிலையான மீன்பிடிக்கான அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் என்ற தலைப்பில் 3வது தேசிய கருத்தரங்கம் நடந்தது. தொலை தூரக்கல்வி மற்றும் இணையவழி கல்வி மைய இயக்குநர் பேராசிரியர் கண்ணபிரான் வரவேற்றார். துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி தலைமை வகித்து பேசுகையில், அதிகப்படியான மீன் அறுவடையை கட்டுப்படுத்த அரசு மட்டும் இன்றி உள்ளூர் மக்கள் மற்றும் அனைத்து மக்களும் இணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். மீனவ மக்கள் நவீன தொழில் நுட்பங்களை மீன்வளர்ப்பு மற்றும் மீன் அறுவடையில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். மீன் உற்பத்தியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மீன் நுகர்வை அதிகப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்றார். சீர்காலி ராஜிவ்காந்தி மீன்வளர்ப்பு மைய திட்ட இயக்குநர் முனைவர் அனுப்மண்டல், கொச்சி கடல்சார் உற்பத்தி ஏற்றுமதி நிறுவன துணை இயக்குநர் அறிவுக்கரசு, பாண்டிச்சேரி மீன்வளர்ப்பு ஆலோசகர் சேரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். துறைத்தலைவர் முனைவர் பிரபு கருத்தரங்கின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். முனைவர் குமார் நன்றி கூறினார்.