கேரளாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து “நீருக்குள் மூழ்கிய 40 பேர்’.. இதுவரை 7 குழந்தைகள் உட்பட 23 பேர் பலி!!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். மலப்புரம் மாவட்டத்தின் தானூர் பகுதியில் துவல்திரம் என்ற இடத்தில் கடற்பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. வழக்கமாக 25 பேர் பயணிக்கக் கூடிய இந்த படகில் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுமார் 40 பேர் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சொகுசு படகு திடீரென கவிழ்ந்தததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர்.

12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 8 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் கோட்டுகள் மருத்துவமனையிலும் மற்றவர்கள் திரூர், தனூர், கோழிக்கூடு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான படகு 2 அடுக்குகள் கொண்டது என்றும் கீழ் பகுதியில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கேரள விளையாட்டுத் துறை அமைச்சர், அப்துல் ரஹிமான், சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் ஆகியோர் தலைமையில் மீட்புப் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே கேரள அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் அரக்கோணத்தில் இருந்து 21 பேர் கொண்ட பேரிடர் மீட்புப் படை வீரர்கள் விபத்து நடந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு கமாண்டர் அர்ஜுன் தலைமையில் ஆழ்நிலை நீர் மூழ்கி வீரர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

Related posts

உத்திரமேரூர் செல்லும் சாலையில் லாரி மோதியதில் ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழப்பு

நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை