ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவியுடன் பழகிய மாணவருக்கு பெல்ட்டால் சரமாரி தாக்குதல்: வீடியோ வைரல்

ஈரோடு: ஈரோட்டில் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் சக மாணவியுடன் பழகியதற்கு மகனை கல்லூரி நிர்வாகத்தினர் அடித்து விட்டதாக தாய் புகார் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் முரளி கிருஷ்ணன் (18). இவர், ஈரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பிடெக் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் பழகி வந்துள்ளார். இதனையறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் கடந்த 25ம் தேதி முரளி கிருஷ்ணனை கண்டித்து, கல்லூரியில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்று செல்லும்படி கூறியுள்ளனர்.

இந்நிலையில், முரளி கிருஷ்ணனை கல்லூரி நிர்வாகத்தினர் சரமாரியாக தாக்கியதால் காயம் அடைந்ததாக கூறி அவரை அவரது பெற்றோர் ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முரளி கிருஷ்ணன் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தாலுகா போலீசார், மாணவன் முரளி கிருஷ்ணனிடம் புகாரை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முரளி கிருஷ்ணனின் தாய் மோகனாம்பாள், தனது மகனுடன் நேற்று மருத்துவமனையில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் கூலி வேலை செய்கிறோம். எங்களது குடும்பத்தில் முதல் பட்டதாரியாக எனது மகன் முரளி கிருஷ்ணன் படிக்க விரும்பியதால், பொறியியல் கல்லூரியில் சேர்த்தோம். எனது மகன் அவருடன் படிக்கும் சக மாணவியுடன் பழகியுள்ளார். இந்த காரணத்திற்காக எனது மகனை கல்லூரி நிர்வாகம் எங்களை கல்லூரிக்கு அழைத்தனர்.

நாங்கள் வருவதற்குள் எனது மகனை கல்லூரியில் தரைத்தளத்திற்கு அழைத்து சென்று பெல்டினால் சரமாரியாக அடித்துள்ளனர். கீழே தள்ளி காலால் மிதித்துள்ளனர். இதனை அறிந்து நாங்கள் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டதற்கு அப்படிதான் அடிப்போம். உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அங்கு எத்தனையோ நடக்கிறது. நாங்களாவது இதை வெளியே கொண்டு வந்துவிட்டோம். நிறைய மாணவ-மாணவிகள் சொல்லாமல் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு: உச்ச நீதிமன்றம் அதிரடி

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தலைமறைவு குற்றவாளி கைது

கோடை காலத்தில் அதிகமாக பருகும் செயற்கை குளிர்பானங்களால் ஏற்படும் தீமைகள்: மருத்துவர்கள் தரும் அட்வைஸ்