பட்டியலினத்தவரின் சாதி சான்று விவகாரம் உண்மைத்தன்மை குறித்து ஆராய டிஎன்பிஎஸ்சிக்கு அதிகாரமில்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 1996-97ம் ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் பங்கேற்று, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி என்பவர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி பட்டியலினத்தவர் சாதிச் சான்று பெற்றிருந்தார். பணி நியமனத்துக்கு கணவர் பெயரில் சமர்ப்பித்த சாதிச் சான்றுக்கு பதில், தந்தை பெயரில் பெற்ற சாதிச் சான்றை சமர்ப்பிக்கும்படி அவருக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஜெயராணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தகுதியான அதிகாரி வழங்கிய சாதிச் சான்றிதழ் செல்லத்தக்கது.

தந்தை பெயரில் பெற்ற சாதி சான்றிதழை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் திலகவதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பட்டியலினத்தவர்கள் சாதிச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களுக்கே அதிகாரம் உள்ளது. சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை.

இந்த விஷயத்தில் தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேசமயம், ஜெயராணியின் சாதிச் சான்றிதழை சரிபார்க்கும்படி அரசு கருவூல கணக்கு துறை ஆணையர், மாவட்ட குழுவுக்கு அனுப்ப வேண்டும். அதன் மீது விசாரணை நடத்தி ஆறு மாதங்களில் உரிய முடிவை மாவட்ட குழு எடுக்க வேண்டும். இந்த குழுவின் முன் விசாரணையில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை ஜெயராணி வழங்கலாம் என்று உத்தரவிட்டனர்.

Related posts

தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கக் கோரி வழக்கு

வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!

அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி