திருப்பூர், ஜூன் 9: திருப்பூர் கோர்ட்டு வீதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் போலீசார் பலர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் கடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதில் பெரியவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஆனால் 3 சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களை நேற்று தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், மருத்துவர்களிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டு தெரிந்துகொண்டார். மேலும், தற்போது அந்த பகுதியில் தெருநாய்கள் பிடிக்கும் பணியும் நடந்து வருகிறது. ஆறுதல் தெரிவிக்கும் போது கவுன்சிலர் செந்தூர் முத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கிடையே நேற்று முன்தினம் வெங்கமேடு பகுதியில் உள்ள கே.பி.ஆர். சலவை ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப்புகையால் பொதுமக்கள் சிலர் மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களையும் செல்வராஜ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.