‘‘இலை கட்சி ஒரு யூனியன்லயே காணாமல் போன கதையை சொல்லுங்க, கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல கணியான ஒன்றியம் இருக்குது. இந்த ஒன்றியத்துல சூரிய கட்சியோட மக்கள் நல பணிகளை பார்த்து பலரும் அந்த கட்சியில சேர்ந்துகிட்டு வர்றாங்க. இதனால இலை கட்சி கரைந்து காணாமல் போயிடுச்சாம். இதனால அங்க இருக்குற ஓரிரு தொண்டர்களும், நிர்வாகிகளும் புலம்பி வர்றாங்களாம். அதோட ஆட்சியில இருந்தப்பவே அந்த ஒன்றியத்துல 20 ஆண்டுகளுக்கு, யாரையும் ேமலே வரவிடாம வீரமானவரை கையில வெச்சிக்கிட்டு ராகத்துல தொடங்குற பெயர் கொண்டவர் ஆட்டம் போட்டாராம். இப்ப அவரு வெளியவே தலை காட்டுறதே இல்லையாம். இலைகட்சியோட நிலைமைய புரிஞ்சுக்கிட்டு, அவரே பல முக்கிய நிர்வாகிகளை அணுகி, நீங்க கட்சி மாறிடுங்க. சூரிய கட்சிக்கு போயிடுங்க. இனிமே இலை கட்சி வேலைக்கு ஆகாதுன்னு வழியனுப்பி வர்றாராம். இப்போது இலை கட்சி நிர்வாகிகள் பலபேர் சூரிய கட்சியல ஐக்கியமாகி வர்றாங்கன்னு அந்த கட்சிக்காரங்களே வெளிப்படையாக பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஹனிபீ மாவட்டத்துல கோடை காலத்துல இலையுதிர்காலம் தொடங்கி இருக்குபோல…’’ என சூசகமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஹனிபீ மாவட்டத்துல இலைக்கட்சி சார்பில் பூத் கமிட்டி அமைச்ச குழுவுல, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை புறக்கணிச்சிட்டதா கொந்தளிப்பு வெடித்துள்ளதாம். அதாவது ஹனிபீ மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதி இருக்கு. இந்த 4 தொகுதிகளிலும் இலை கட்சி தற்போது புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஏழு பேர் கொண்ட குழுவை அமைக்க இருக்காங்க. 4 தொகுதிகளிலும் சேலத்துக்காரர் சார்ந்த சமூகத்தினரையே உறுப்பினரா நியமிச்சாங்களாம். மற்ற சமூகத்தை புறக்கணிச்சிட்டதா கட்சிக்காரங்க எரிச்சலில் இருக்காங்க. அதுலயும் பிக் குளம் ரிசர்வ் தொகுதியில் வருகிறது. இந்த தொகுதியிலும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘ஏற்கனவே தேனிக்காரர் தான் இந்த மாதிரி சமூக பாகுபாடு பார்ப்பாரு. இப்ப சேலத்துக்காரரும் அதே மாதிரி நடந்துக்கிறாரு. அனைத்து சமூகத்தினருக்கும் முக்கியத்துவம் தரலைன்னா, வேறு கட்சிக்கு அணி மாறிடுவோம்னு சொன்னாராம். கூட்டத்துல இருந்தவங்களும் அதுதான் சரி என்று சொன்னாங்களாம். இதனால குழுவை கலைக்கலாமா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் சேலம்காரர்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் காக்கி அதிகாரி வைத்த சிசிடிவி கேமரா பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரி கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தின் பல இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்காம். ஆனால் காட்சி பொருளாக இருப்பதுதான் இப்போதைக்கு காக்கிகள் வட்டத்தில் பேச்சா இருக்காம். பராமரிப்பு இல்லாத காரணத்தால, அவை செயலிழந்து காட்சி பொருளாக இருக்காம். அண்மையில் திருட்டு வழக்கில் தொடர்புடைய வாகனம் ஒன்றை கண்காணிக்க போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு போனாங்களாம். அப்போதுதான் கலெக்டர் அலுவலக வாசல் அருகே இருந்த கேமராக்கள் காட்சி பொருளாக மாறி இருக்கும் தகவல் வெளியே வந்து இருக்காம். இப்போது காவல்துறை சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க முடிவு செய்து இருக்காங்க. இதற்கு குமரியின் காக்கி உயரதிகாரியே நேரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளதுதான் ஹைலைட்…’’ என்றார் விக்கியானந்தா.