விகேபுரம் : விகேபுரம் நகராட்சியில் தமிழக அரசின் எனது குப்பை எனது பொறுப்பு இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்வு, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எனது வாழ்க்கை எனது சுத்தமான நகரம் என்ற வரிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக குப்பைகளை குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி போன்றவற்றை வலியுறுத்தி நகராட்சியின் புதிய முயற்சியாக ரத வீதியில் அமைந்துள்ள கலையரங்கத்தில் மறுசுழற்சி மையம் திறக்கப்பட்டு, பொதுமக்கள், மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டன.
இதன் விளைவாக கடந்த 30ம்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 263 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பொதுமக்கள் கொண்டு வந்தனர். அவர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு நகராட்சி மூலம் டோக்கன் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் மாலை 5மணியளவில் பிஎல்டபிள்யூஏ மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி தலைவர் செல்வசுரேஷ் பெருமாள் தலைமையில், ஆணையாளர் கண்மணி வழிகாட்டுதலின்படி, சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ் முன்னிலையில் இப்போட்டிக்கான குலுக்கல் நிகழ்ச்சி நடந்தது.
இதனைத் தொடர்ந்து குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10பேர்களுக்கு பள்ளி பேக்குகளும். இரண்டாவது 20 பேர்களுக்கு லஞ்ச் பேக்களும்30 பேர்களுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 61 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக பென்சில் பாக்ஸும் வழங்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் ராமலட்சுமி விக்னேஷ் மற்றும் தலைமைஆசிரியர் ஜோதி நிர்மலா, ஆசிரியர்கள் பார்த்தசாரதி, மைதீன்பிச்சை, தன்னார்வலர் கிரிக்கெட் மூர்த்தி, பேஷன் அரிமா சங்கத் தலைவர் பொன்ராஜ், திமுக மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம், தொண்டு நிறுவன பிரதிநிதி, நகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் ஈஸ்வரன் இந்திரா உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நகராட்சி, பேஷன் அரிமா சங்கம், விகேபுரம் பெட்ரோல் பங்க் ஆகியவை செய்திருந்தன.