திருவனந்தபுரம்: கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜு நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் சாலைகளில் 694 செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது சாலை விதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கையும், விபத்துகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளன.
3 நாளில் 3.5 லட்சம் விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 56 விஐபி வாகனங்களும் உண்டு. செப்டம்பர் 1ம் தேதி முதல் பஸ்கள் உள்பட கனரக வாகனங்களுக்கும் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்படும். டிரைவர்கள் மற்றும் டிரைவர் கேபினில் அமர்ந்திருப்பவர்களும் சீட் பெல்ட் கட்டாயமாக அணிய வேண்டும். அரசு பஸ்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.