கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்

விருதுநகர்: விருதுநகர் வழி ஓடும் கவுசிகா ஆறு கருவேல் முட்புதராக, குப்பை கிடங்கி வரும் நிலையில் ஆற்றை தூர்வாரி கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், ஆற்றில் தடுப்பணைகள் கட்டவும், குல்லூர்சந்தை அணையை முறையாக தூர்வாரி மராமத்து செய்து விவசாயத்திற்கு ஏற்றதாக மாற்ற விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தின் கல்லுப்பட்டி, பேரையூர், எழுமலை, குச்சம்பட்டி வையூர் பகுதி கிராம கண்மாய்கள் மற்றும் காட்டுப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடமலைக்குறிச்சி கண்மாய் வந்து சேர்கிறது. வடலைக்குறிச்சி கண்மாய் நிறைந்து வெளியேறும் தண்ணீர் கௌசிகா ஆற்றாக உருவெடுத்து சின்னமூப்பன்பட்டி, மீனாட்சிபுரம், விருதுநகரின் உள்பகுதியில் அகமதுநகர், பர்மா காலனி, அன்னை சிவகாமிபுரம், பாத்திமாநகர், ஆத்துமேடு வழியாக குல்லூர்சந்தை அணையை அடைக்கிறது.

நதிகள், ஆறுகளை போல் கவுசிகா மலைகளில் இருந்து உருவாகவில்லை என்றாலும் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரில் உருவானது. நிலத்தடி நீருக்கான ஆதாரமாக இன்றும் விளங்குகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கவுசிகா நதிநீர் விருதுநகர் பகுதி மற்றும் நதி ஓடும் பகுதி கிராம மக்கள், கால் நடைகளின் குடிநீர் ஆதாரமாக இருந்திருக்கிறது.

தற்போது, விருதுநகர் நகராட்சி, சிவஞனாபுரம், பாவாலி, கூரைக்குண்டு, ரோசல்பட்டி, குல்லு£ர்சந்தை ஊராட்சிகள் மற்றும் வழித்தட கிராமங்களின் கழிவுநீர் ஓடையாகி விட்டது. கௌசிகாவின் கரையோரங்களில் கட்டிடங்களின் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து விட்டது. மேலும் குடியிருப்புகளின் கழிவுநீரும் ஆற்றில் கலப்பதால் கவுசிகா ஆறும், ஆற்றில் உள்ள குல்லூர்சந்தை அணைக்கட்டும் கழிவுநீர் குளமாக மாறிவிட்டது. குல்லூர்சந்தை அணையின் 2,463 ஏக்கர் பாசன நிலப்பரப்பளவும் தரிசாக கிடக்கிறது.

அதிமுக ஆட்சியில் 2013ல் கவுசிகா ஆற்றை தூர்வார ஒதுக்கிய ரூ.3 கோடி நிதியில் முட்களை மட்டும் அகற்றினர். அதன்பின் 2020ல் அதிமுக ஆட்சியில் அணையை தூர்வாரி மராமத்து செய்ய ஒதுக்கிய ரூ. 6.50 கோடி நிதியில் அரைகுறையாக கரைகளை மட்டும் மராமத்து செய்து முறையாக பணிகளை செய்யவில்லை.
இந்நிலையில் கவுசிகா ஆற்றை தூர்வார வேண்டும். விருதுநகர் நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும். அத்துடன் ரோசல்பட்டி, கூரைக்குண்டு, சிவஞானபுரம், பாவாலி ஊராட்சிகளின் கழிவுநீர் கவுசிகாவில் கலக்காமல் விருதுநகர் நகராட்சி பாதளாச்சாக்கடை இணைப்புகளில் இணைத்து சுத்திகரிப்பு செய்து, தண்ணீரை தூய்மைப்படுத்தி விட வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது.

மேலும் விருதுநகர் பகுதியில் கவுசிகா ஆற்றில் தடுப்பணைகள் கட்டினால் நிலத்தடிநீர் மட்டம் உயரும், இதனால் விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதி ஊராட்சிகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். கவுசிகா ஆற்றை தூர்வாரி பராமரித்தால் விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதி ஊராட்சி மக்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜயமுருகன் கூறுகையில், கௌசிகா ஆறு 30 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கருக்கான விவசாய பயன்பாட்டிற்கும் பயன்பட்டது. கழிவுநீர் கலப்பால் குல்லூர்சந்தை அணை நீர் விவசாயத்திற்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அணையின் 2,463 ஏக்கர் பாசன நிலமும் தரிசாக கிடக்கிறது. கவுசிகா ஆற்றை தூர்வாரி, விருதுநகர் பகுதியில் தடுப்பணை கட்டவும், நகராட்சி, ஊராட்சிகளின் கழிவுநீர் கலப்பை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுசிகா ஆற்றில் தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். நகரின் குடிநீர் மற்றும் பிற பயன்பாட்டிற்கான நீர் தேவையை பூர்த்தி செய்யலாம். மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.

Related posts

புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு

தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கார் கவிழ்ந்து விபத்து 3 பேர் பரிதாப பலி: 5 பேர் படுகாயம்