கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ5.48 கோடியில் புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ27.94 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்து, ரூ5 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதி திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் உள்ள மைதானத்தில் ரூ20.99 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், திரு.வி.க. நகர் 8வது தெருவில் உள்ள காலி மைதானத்தில் ரூ46.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள சிறுவர் பூங்கா, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஜி.கே.எம். காலனி 34வது தெரு, பள்ளி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, பல்லவன் சாலை மற்றும் ஜெகநாதன் சாலை ஆகிய இடங்களில் ரூ1 கோடியே 91 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 5 பல்நோக்கு மையங்கள் (ரேஷன் கடைகள்) ஆகிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், பல்லவன் சாலையில் 1100 மீட்டர் நீளத்திற்கு ரூ15.40 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து, அகரத்தில் ரூ27.94 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஜெகநாதன் தெருவில் ரூ48.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பல்நோக்கு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், ஜவஹர் நகர் 2வது பிரதான சாலையில் உள்ள நட்சத்திர விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மையம் மற்றும் ஜவஹர் நகர் 1வது வட்ட சாலையில் உள்ள பூப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை முதல்வர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஜவஹர் நகரில் ரூ30.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேஜை பந்தாட்டத்திற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

ஜவஹர் நகர் 2வது பிரதான சாலையில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து திருமலை நகர் 1வது தெரு பூங்கா, முகமது உசேன் காலனி பூங்கா, செந்தில் நகர் 13வது தெரு மற்றும் சீனிவாசா நகர் 3வது பிரதான சாலையில் உள்ள நகர்ப்புற சுகாதார மையம் ஆகியவற்றை ரூ35 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, சக்திவேல் நகர் 2வது குறுக்கு தெருவில் உள்ள பூங்காவில் ரூ35 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள நடைபாதை, திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் கழிப்பறை வசதி, ரூ35 லட்சம் மதிப்பீட்டில் திரு.வி.க.நகர் 18வது தெருவில் அமைந்துள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் வெளிப்புற சுற்றுச்சுவர் மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தீட்டித் தோட்டம், குறுக்கு தெருக்களில் பேவர் கற்களைக் கொண்டு புதிய சாலை அமைக்கும் பணி, ஜவஹர் நகர் 5வது பிரதான சாலை பூங்கா, பெரியார் நகர் 20வது தெரு பூங்கா மற்றும் ராம்நகர் 2வது பிரதான சாலை விளையாட்டு திடல் ஆகியவற்றில் ரூ35 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள், ₹35 லட்சம் மதிப்பீட்டில் கோபால் காலனி விளையாட்டுத்திடலில் புதிதாக திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி, ஜி.கே.எம் காலனி 15வது தெருவில் பேவர் கற்களை கொண்டு புதிய சாலை அமைக்கும் பணி மற்றும் லோகோ ஒர்க்ஸ் சாலையில் உள்ள சிறுவர் விளையாட்டு திடலில் புதிதாக சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் வாங்கி அமைக்கும் பணிகள்,

கபிலர் தெரு, திக்காகுளம் தெரு, வசந்தா தோட்டம் மதுரை தெரு ஆகிய இடங்களில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்களில் ரூ35 லட்சம் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி மற்றும் திக்காகுளம் பகுதியில் வெளிப்புற சுற்றுச்சுவர் அமைக்கும் பணி என மொத்தம் ரூ2.10 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, பெரியார் நகரில் உள்ள கூட்டுறவு சங்க மைதானத்தில் அனிதா அச்சிவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகள் மற்றும் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள், மடிக்கணினிகள், தையல் இயந்திரங்களையும் முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, தாயகம் கவி எம்எல்ஏ, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? பிரதமர் மோடிக்கு காங். தலைவர் கார்கே கடிதம்!

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை

கர்நாடக பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிரம்!