பாஜவின் அரசியல் கருவி வருமானவரித்துறை: முத்தரசன் கண்டனம்

சென்னை: திமுகவை அச்சுறுத்த வருமானவரித்துறையை பாஜ அரசு தன் அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்தச் சோதனை நடவடிக்கையில் சட்டம், ஒருங்கு தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வருமான வரித்துறையினர் அலட்சியப்படுத்தியுள்ளனர். எவர் ஒருவர் மீதும் வரும் புகார்களை சட்ட விதிமுறைகளின் படி விசாரிக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டில் முதலீடுகள் திரட்டுவதற்கான அயல்நாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நேரத்தில் அவரது அமைச்சரவை உறுப்பினர் ஒருவரை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு சட்டம், ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுத்தியிருப்பது அரசியல் நோக்கம் கொண்டது. குடியரசுத் தலைவரை நிராகரித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் 21 எதிர்கட்சிகள் பங்கேற்க முடியாத நிர்பந்தத்தை பாஜ ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. பாஜவின் வகுப்புவாத வெறுப்பு அரசியலுக்கு எதிராக சமூக நீதி ஜனநாயக கொள்கை அடிப்படையில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க முனைப்பாக செயல்படும் திமுகவை அச்சுறுத்த வருமானவரித்துறையை பாஜ அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது. இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.

Related posts

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மாவட்டத்தின் முக்கிய ஆறான பழையாற்றில் வெள்ளப்பெருக்கு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 50 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

வில்வித்தை உலக கோப்பை போட்டி; இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை