சென்னை: பூக்கடை ஏகாம்பரேஸ்வரர் கோயில், தர்மராஜா கோயிலுக்கு வாடகை செலுத்தாத 12 கடைகளுக்கு, இந்து அறநிலையத்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். பூக்கடை தங்க சாலை தெருவில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 11 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. வாடகைதாரர்கள் கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தாமல் கோயில் கோபுரம் தெரியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுகுறித்து இந்து அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பெயரில் கடைகளை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவின்பெயரில் நேற்று காலை யானைகவுனி போலீசார் மற்றும் ஏழுகிணறு போலீசார் உதவியுடன், உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையில், கோயில் செயல் அலுவலர் நற்சோனை மற்றும் ஊழியர்கள், கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அதேபோல், ஏழுகிணறு மாரிமுத்து தெருவில் உள்ள தர்மராஜர் கோயிலுக்கு சொந்தமான கடை வாடகை செலுத்தாமல் வந்தது. அதையும் மூடி சீல் வைத்தனர்.