மன்னிப்பு கேட்க வேண்டும்!: ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரி தூற்றி இருப்பது விஷமத்தனமானது.. வைகோ கண்டனம்..!!

சென்னை: திராவிட இயக்க கருத்தியலை இழிவுபடுத்தி வரும் ஆளுநர் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டி இன்று வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில் திராவிட மாடல் குறித்து அவர் விமர்சித்துள்ளார். “திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி. திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் முழக்கம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கைகள் ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது.

இந்த கொள்கை சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், வரலாற்றை மறைக்க பார்க்கிறது” என்று கூறி உள்ளார். ஆர்.என்.ரவி இந்தப் பேட்டியில் திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரி தூற்றி இருப்பது விஷமத்தனமானது; கடும் கண்டனத்திற்கு உரியது. மனுதரும நீதியை மறுத்து மனித நீதிக்கான குரல், சமூக நீதி, சமத்துவம், பெண் உரிமை, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மக்களின் நலன், மொழி, இனம், பண்பாட்டு உரிமை, அரசியல், பொருளாதாரத்துறைகளில் தமிழ்நாட்டின் உரிமைப் பாதுகாப்பு, மாநில சுயாட்சிக்கான குரல் இவற்றையெல்லாம் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல்.

இதனை வெற்று முழக்கம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி முகாரி இராகம் பாடுவது அவரது இந்துத்துவ ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. ஆர்.எஸ் .எஸ் கோட்பாடுகளை ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு உளறிக் கொட்டக் கூடாது. ஆளுநர் பதவியை விட்டு வெளியேறிப் பேசட்டும். திராவிட இயக்கக் கருத்தியலை இழிவுப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பர்கூர் அருகே சென்டர் மீடியனில் மினி வேன் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்

தமிழ்நாட்டில் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழ் வெளியீடு

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஜூன் 2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு