புதுடெல்லி: கடந்த 8 மாதங்களில் அதிகபட்சமாக ஒரே நாளில் 12,591 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,591 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கை 65,286 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் புதிதாக 40 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 5.46 சதவீதமாக உள்ளது.
அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா அறிகுறிகளை தொடர்ந்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். நேற்று அவர் டெல்லியில் நடைபெற்ற விமான படை கமாண்டர்கள் மாநாட்டில் பங்கேற்க இருந்த நிலையில் தொற்று காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டார்.