ராஜஸ்தான் தேர்தலை காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும்: சச்சின் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங். மறுப்பு..!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையில் உள்ள உட்கட்சி பூசல் முடிவுக்கு வரவில்லை. சச்சின் பைலட்டை அவ்வப்போது டெல்லி மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்திக் கொண்டே வந்தது.

கர்நாடகாவில் பெற்ற வெற்றியை ராஜஸ்தானில் பெற வேண்டும் என்பதற்காக அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரையும் டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனைகள் நடத்தியது. இந்த ஆலோசனைகளின் முடிவில் இருவரும் இணைந்தே தேர்தலை சந்திப்பது என அறிவித்தனர். ஆனாலும் முந்தைய வசுந்தரா ராஜே தலைமையில் நடந்த பா.ஜ அரசின் ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட தனது கோரிக்கைகளில் உறுதியாக இருப்பதாக பைலட் தெரிவித்தார். இதனால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சச்சின் பைலட் வெளியேறும் முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஜூன் 11ம்ல் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்த பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்; சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக பரவும் தகவல் வதந்தி. ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும் என்றும் அறிவித்தார்.

Related posts

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு

களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்