2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

திருச்சி: திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கே.ஆர்.எஸ் நகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார்(30). இவரது மனைவி ஷோபனா(26). இவர்களுக்கு தக்ஷிவன்(3), கபிஷன்(11 மாதம்) என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருச்சியில் கொரோனாவுக்கு முன்னதாக சொந்தமாக பர்னிச்சர் கடை வைத்து மனோஜ்குமார் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதித்ததோடு மனோஜ்குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அனைவரிடமும் ஷோபனா தெரிவித்து வந்தார். மேலும் உற்றார், உறவினர்களிடம் மனநலம் பாதிக்கப்பட்டவரை தனக்கு திருமணம் செய்து வைத்து தனது வாழ்க்கையை வீணடித்து விட்டதாக புலம்பி வந்துள்ளார். மேலும் ஷோபனா விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பணி நிமித்தமாக கொடைக்கானல் சென்று விட்டு நேற்று மதியம் மனோஜ்குமார் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. இதனால் மனைவியை அழைத்தார். ஆனால் அவர் வீட்டிலிருந்து ெவளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து வீட்டு ஜன்னலில் எட்டி பார்த்தனர். அப்போது 2 குழந்கைள் மற்றும் ஷோபனா ஆகியோர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்ததும் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய தாய், 2 குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதற்கு என்ன காரணம், கணவர் மனநிலை பாதிக்கப்பட்ட விரக்தியில் இறந்தாரா, கடன் தொல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.

Related posts

மபியில் இரவு 10 மணி தாண்டியதால் சவுகான் மைக்கை ஆப் செய்த போலீசை மிரட்டிய எம்எல்ஏ: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

போலி பேச்சு, பொய்யான வாக்குறுதி; 3ம் கட்ட தேர்தலிலும் பாஜ தூக்கி வீசப்படும்: அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு

மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு