மலப்புரம்: கேரளா படகு விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தலா ரூ.10 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். கேரளாவில் இன்று ஒரு நாள் துக்கம் கடைபிடிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது. இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் அங்கு கடலில் படகு சவாரி செல்ல சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
இதனால் குறைந்த நபர்கள் செல்ல வேண்டிய படகில், அதிகமான நபர்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் 2 அடுக்கு கொண்ட சுற்றுலா படகில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்றனர். அந்த படகு கரையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் கடலில் தத்தளித்தபடி அங்கும் இங்குமாக ஆடியது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த படகு திடீரென தலைக்குப்புற கடலில் கவிழ்ந்தது.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்துக்கு அதிகப்படியான பயணிகளை ஏற்றி சென்றதே காரணம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் செல்லக்கூடிய படகில் 40 பயணிகள் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.
Deeply saddened by the tragic loss of lives in the Tanur boat accident in Malappuram. Have directed the District administration to effectively coordinate rescue operations, which are being overseen by Cabinet Ministers. Heartfelt condolences to the grieving families & friends.
— Pinarayi Vijayan (@pinarayivijayan) May 7, 2023
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் விஜயன், மீட்புப் பணிகளை திறம்பட ஒருங்கிணைக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பாக கேரள முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
மலப்புரத்தில் தனூர் படகு விபத்தில் உயிர் இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அமைச்சர்கள் மேற்பார்வையில் மீட்புப் பணிகளை திறம்பட ஒருங்கிணைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களுன் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இதயப்பூர்வமான இரங்கல்கள் என விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.