சென்னை: வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையிடம் குடிபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட செக்யூரிட்டியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் கிழக்கு வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (பெயர் மற்றப்பட்டுள்ளது). இவர் வீட்டின் அருகே தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது 3 வயது மகள் வீட்டின் அருகே புதிதாக குடியிருப்பு கட்டப்பட்டு வரும் இடத்தில் உள்ள மணலில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது கட்டுமான பணி நடைபெறும் பகுதியில் செக்யூரிட்டியாக உள்ள அண்ணாநகர் கிழக்கு வஉசி நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (38) குடிபோதையில் சிறுமியை தூக்கி சென்று பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் செக்யூரிட்டியிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர் அவரை சரமாரியாக அடித்து உதைத்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், செக்யூரிட்டி சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.