தோகைமலை, மே 5: தோகைமலையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தின் 36ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 28ம் தேதி புனித சூசையப்பர் ஆலயத்தின் முகப்பு வாயிலில் அன்னையின் சொரூபம் அமைக்கப்பட்டு நவநாள் ஜெபம் நிகழ்ச்சிகள் நடந்தது.பின்னர் அடுத்த நாள் மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அன்னை மாதாவிற்கு நவநாள் ஜெபம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரலான பக்தர்கள் கொண்டனர்.
கடந்த 30ம் தேதி மாலை புனித சூசையப்பர் ஆலயத்தின் 36ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்வு நடந்தது. அப்போது பேரூர் பங்கு தந்தை இருதயராஜ் திருப்பலி நிறைவேற்றினார். பின்னர் கெபி அர்ச்சிப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. முதல் நாள் திருவிழா கடந்த 1ம் தேதி அன்று புனித சூசையப்பர் ஆலயத்தின் திருவிழா தொடங்கப்பட்டது. அன்று மணப்பாறை மௌன மடம் இல்ல அதிபர் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலிகள் நிகழ்ச்சிகள் நடந்தது.
தொடர்ந்து புனித சூசையப்பர் மற்றும் அன்னை மாதா மின் அலங்கார சப்பரத்தில் பவனி வந்தது. இந்த தேர் பவனிகள் தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கைகளுடன், குளத்தலை மணப்பாறை மெயின்ரோடு, திருச்சி மெயின் ரோடு, கருப்பகோவில் தெரு, கடைவீதி, தோகைமலை பேருந்து நிலையம் வழியாக மீண்டும் புனித சூசையப்பர் ஆலயத்தில் நிறைவு பெற்றது. பின்னர் கொடியிறக்கம் செய்து நன்றி திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த திருவிழாவில் பங்குதந்தை, செர்வைட் அருட்சகோதரிகள், விழாக்குழுவினர், இறைமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.